Pages

Tuesday 11 June 2013

தமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES

அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” படம் இரண்டு வருடங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற பெண்களுக்கான சர்வதேச திரைப்படவிழா ஒன்றில் காண்பிக்கப்படுவதாக இருந்தது.
அந்தத் திரைப்படவிழாவுக்கென்று எனது படத்தின் புதிய பிரதியொன்றை எடுத்துக் கொடுக்க எண்ணிய நான், அந்தத் படத்தின் நெகட்டீவை வெளியே எடுத்தபோதுதான் தெரிந்தது - “வீடு” படத்தின் நெகட்டீவ் முழுவதுமாக கெட்டுப்போய்,மேற்கொண்டு ஒரு பிரதிகூட எடுக்க முடியாத நிலையில் அழிந்துபோய் இருக்கிறதென்று!
அதைப் பார்த்து நிலைகுலைந்துபோன நான் உடனடியாக எனது “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய படங்களின் நெகட்டீவ்களை எடுத்துப் பார்த்தேன். “வீடு” படத்தின் நெகட்டீவுக்கு ஏற்பட்ட அதே கதிதான்  “சந்தியாராகம்” மற்றும் “மறுபடியும்” ஆகிய இரண்டு படங்களுக்கும் ஏற்பட்டிருந்தது.ஒரு பிரதி கூட எடுக்க முடியாத அளவுக்கு இந்த இரண்டு படங்களின் நெகட்டீவ்களும் கெட்டுப்போயிருந்தன.
எனது மூன்று பிள்ளைகள் என் கண் முன்னேயே இறந்து விட்டது போல ஒரு சோகம் என்னை கவ்விக்கொண்டது.
எனது காலத்திலேயே அழிந்து போன எனது படங்களை நினைத்து நினைத்து நான் கண்ணீர் விட்ட இரவுகள் ஏராளம். அந்த இழப்பு தந்த துக்கத்திலிருந்து இன்று வரை என்னால் வெளியே வர முடியவில்லை.
“வீடு” “சந்தியாராகம்” “மறுபடியும்” ஆகிய எனது படங்களின் அழிவை நினைத்து கொண்டால்... இப்பொழுதும் நெஞ்சு வலிக்கிறது.
நான் இயக்கிய முதற்படமான “கோகிலா” , எனது முதல் தமிழ் படமான “அழியாத கோலங்கள்” , அதன்பின் வந்த “மூடுபனி”, எனக்கும் கமலுக்கும் தேசிய விருது வாங்கித்தந்த - பார்த்த் அனைவர் மனதிலும் இன்று வரை பசுமையாக நியாபகமிருக்கும் எனது “மூன்றாம் பிறை” ஆகிய படங்களின் நெகட்டீவ்கள் என்ன நிலையில் இருக்கின்றன என்பதை பார்த்துத் தெரிந்து கொள்வதற்கான தைரியம் எனக்கில்லை. அந்த படங்களின் நெகட்டீவ்களுக்கு எதாவது ஆயிருந்தால், அந்த துக்கத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று பட்டதால் பார்க்கவில்லை. பத்திரமாக இருக்கின்றன என்ற குருட்டு நம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படங்கள் என்று படித்தவர்களாலும்,விமர்சகர்களாலும் ,பாமர ரசிகர்களாலும் ஒரே மனதாக ஒத்துக் கொள்ளப்பட்ட “வீடு” , “சந்தியாராகம்” , “மறுபடியும்” படங்களின் நெகட்டீவ்கள் பாதுகாக்கப்பட்டிருக்க  வேண்டிய முறையில் பாதுகாக்கப்பட்டிருந்தால் அவை அழிந்து போயிருக்காது.
”அழியாத கோலங்கள்”  77-லும், “வீடு” 87-லும் , “மறுபடியும்” 93-லும் வெளியான படங்கள். இந்த படங்களே இனி பிரதியெடுக்க முடியாதபடி அழிந்துபோய் விட்டன என்றால் இவற்றிற்கு முன் வெளிவந்த நமது தமிழ் படங்களின் கதி என்ன? பராசக்தி,ரத்தக்கண்ணீர்,மனிதன்,பாசமலர் போன்ற நமது படங்களின் நெகட்டீவ்கள் எப்படி இருக்கின்றன?
ஏவிஎம் போன்ற பணவசதி படைத்த தனியார் நிறுவனங்கள் சில அவரவர் படங்களை பாதுகாக்க வேண்டிய முறையில் பாதுகாத்து வருவதால், அவர்களது படங்கள் பிழைத்திருக்கின்றன.
சினிமாவில் ஊறித்திளைக்கும் இனம் நம் தமிழினம். நமது மக்களுக்கு அவர்கள் வரவுக்குள் கிடைக்கும் ஒரே பொழுதுபோக்கு சினிமாதான், நமது மீடியாக்களுக்கு இருக்கும் நிரந்தர பிழைப்புக்கூட சினிமாதான்.
தமிழர்களது அன்றாட வாழ்க்கையிலும் அவர்தம் அரசியலிலும் சினிமா ஏற்படுத்திய - ஏற்படுத்திக்கொண்டிருக்கும் தாக்கம் அசுரத்தனமானது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் எவருக்கும் இருக்க முடியாது.
ஒரு சராசரித் தமிழனுக்கு,தமிழச்சிக்கு, இசையென்றால் அது சினிமாப் பாடல்கள்தான். இயல் என்றால் அது நமது சினிமாக்களுக்கு எழுதப்படும் நாடகத்தனம் கொண்ட நமத்துப்போன உரையாடல்கள்தான். கவிதையென்றால் அது நமது சினிமாப்பாடல்களுக்கென்று எழுதப்படும் (இப்பொழுதெல்லாம் அது தமிழ் தானா அல்லது வேறேதேனும் மொழியா என்று தெரியாத) அந்த வரிகள்தான். நடனம் என்றால் அது திரையில் ஆடப்படும் அந்த ஆட்டம் தான்.போடப்படும் அந்த குத்துதான். ஓவியம் என்றால் நமது சினிமாக்களுக்காக வைக்கப்படும் விளம்பர பேனர்கள்தான்.உடையென்றால் அது வெள்ளித்திரையில் நமது நடிக நடிகையர் உடுத்திக்கொள்ளும் அல்லது உடுத்திக்கொள்ளாமல் விடும் அந்த ரக உடைதான்.அன்றாட பேச்சு வழக்கென்றால்,அது நமது படங்களுக்கான கதாபாத்திரங்கள் திரையில் எப்படிப் பேசுகிறார்களோ, அந்தப் பேச்சு வழக்குதான்... (சும்மா அதிருதில்ல...! நண்பேண்டா..!)
அரசியல் என்றால், “வேலைக்காரி” படத்தின் கதை-வசனகர்த்தா அண்ணா அவர்கள் முதல், ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்த இன்றைய அம்மா அவர்கள் வரை, தமிழகத்தின் அத்தனை முதல்வர்களும் சினிமாக்காரர்கள்தான்.(இடையில் வந்து போன பன்னீர்செல்வம் அவர்களை ஒரு விபத்து என்று விட்டு விடலாம்) தமிழனது முப்பத்தைந்து நாற்பது ஆண்டுகால அரசியலை சினிமாதான் - சினிமாக்காரர்கள்தான் கட்டிக் காத்து (?) வருகிறார்கள்.
இது போதாதென்று, இனி வரும் காலங்களில் கூட அப்படித்தான் என்று திரைத்துறை சார்ந்த சிலர் இங்கு பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்கள் மீது சினிமா செலுத்திக்கொண்டிருக்கும் ஆணித்தரமான ஆதிக்கத்தை எடுத்துச் சொல்ல இவைகளை விட வேறு என்ன உதாரணங்கள் வேண்டும்..?
இப்பேர்பட்ட நமது தமிழ் சினிமாவை,அதன் வரலாற்றை,உலகிற்கும், இனி வரும் நமது தமிழ் தலைமுறைகளுக்குமெனப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணமோ அக்கறையோ அதற்கான செயல்பாடுகளோ தமிழ் சினிமா மூலம் கோடி கோடியாக லாபம் பார்ப்பதில் மட்டுமே குறியாய் இருக்கும் அதன் பெரியவர்களுக்கோ அல்லது அதன் இதமான இளம் சூட்டில் அரசியல் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியலாளருக்கோ கரிசனை இருப்பதாகத் தெரியவில்லை.
தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகள் கூட திரையரங்கங்களின் இனி பார்க்க முடியாதபடி அழிந்து போய் விட்டன - போய்க்கொண்டிருக்கின்றன.
காலத்திற்கு காலம் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட - ஏற்பட்டுக்கொண்டிருக்கும் - இனியும் ஏற்பட இருக்கும் உள்ளடக்க ரீதியான - உருவ ரீதியான விரும்பத்தக்கது - தகாததுமான மாற்றங்களை ஆராய்ந்து படிக்க எண்ணும் ஆராய்ச்சியாளர்களுக்கு, அழிந்து போன - அழிந்து போகவிடப்பட்ட அந்த படைப்புகள் இனிக் கிடைக்க வாய்ப்பில்லை.
தமிழ் சினிமாவின் அந்த சரித்திர ஆவணங்களில் ஒன்றிரண்டையாவது பார்க்க வேண்டும் என்றால் மஹாராஷ்டிராவில் உள்ள பூனேயில் மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய திரைப்பட காப்பகத்திற்குத்தான் போக வேண்டும். அல்லது அவற்றின் திருட்டு விசிடிக்கள் தப்பித்தவறி எங்காவது கிடைக்குமா என்று தேட வேண்டும். அல்லது எப்பொழுதாவது காண்பிக்கப்பட்டால், பல விளம்பர இடைவேளைகளோடு அவற்றை நமது தொலைக்காட்சிகளில் தான் பார்க்க முடியும்.
மத்திய அரசுக்குச் சொந்தமான தேசிய திரைப்படக் காப்பகத்திற்கு தமிழ் சினிமா மீது தனிப்பட்ட அக்கறை எதுவும் கிடையாது என்பதை அறுபதுகளின் நடுப்பகுதியில், நான் பூனே திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே அறிவேன்.
நமது படங்கள் நமது காலத்திலேயே அழிந்து போய்விட்டன - அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன என்ற துக்கம் காரணம், தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம்,தமிழ் சினிமா மீதுள்ள தனிப்பட்ட காதல் காரணம் கொதித்துப்போன நிலையில்,  உணர்ச்சிவசப்பட்ட ஒரு பலவீனமான தருணத்தில் எழுதப்பட்ட இந்த கட்டுரையின் சில பகுதிகள் சற்று காட்டமாக அமைந்துவிட்டன.அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நமது தமிழ் படங்கள் நமது காலத்திலேயே அழிந்துபோவதைத் தடுக்க நாம் என்ன செய்யலாம். நமது அரசு என்ன செய்யலாம் என்று சிறிது அக்கறையோடு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
அந்த வகையில் நமது முதல் தேவை ஒரு தமிழ்த் திரைப்படக் காப்பகம்!
“ஆமா இந்த குப்பைகளைப் பாதுகாத்துவேறு வைக்கவேண்டுமாக்கும்” என்று சிலர் முனுமுனுப்பது என் காதில் விழுகிறது. இந்த அதிருப்தியாளர்களுக்கு ஒன்று சொல்கிறேன். நமது தமிழ் படங்களின் பெரும்பாலானவை குப்பைகள்தான்,ஒத்துக்கொள்கிறேன். அந்த குப்பைகளுக்கிடையில் அவ்வப்போது சில மாணிக்கங்களும் வருகின்றனவே ! அந்த மாணிக்கங்களை நாம் மறந்துவிடக்கூடாது.
அப்புறம், இன்னொரு விஷயம் - குப்பைகள் அதிகமாக இருப்பது நமது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல எல்லா மொழி சினிமாக்களிலும் குப்பைகளே அதிகம்.
தமிழ் சினிமாவுக்கான காப்பகம், அமெரிக்கா, ஃப்ரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளின் திரைப்பட காப்பகங்களுக்கு நிகராக அமைக்கப்பட வேண்டும். நமது காப்பகங்களுக்கான பிரதம காப்பாளர் (chief curator) சினிமாவை , குறிப்பாக தமிழ் சினிமாவை ஆழமாக நேசிப்பவராக இருக்க வேண்டும் (A young IAS officer who loves cinema - particularly tamil cinema) அவரையும் அவருக்கு கீழ் பணிபுரிய இருக்கும் இரண்டு,மூன்று இளைஞர்களையாவது , அமெரிக்காவிலோ, ஃப்ரான்ஸிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு அதி நவீன திரைப்படக் காப்பகமொன்றுக்கு குறைந்தது ஆறு மாதங்களாவது திரைப்படப் பாதுகாப்பு தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
தமிழ் திரைப்படக் காப்பகம் அமைவதற்கான ஒரு இடமும் அதற்கான ஒரு கட்டிடமும் வேண்டும். அது சென்னையில்தான் இருக்க வேண்டுமென்றில்லை. ஊட்டி,கொடைக்காணல்,ஏர்காடு போன்ற இடங்களில் கூட இருக்கலாம்.
இதையடுத்து, திரைப்பட காப்பகத்திற்குத் தேவையான , ஒரு நவீன திரையரங்கம் உட்பட, அனைத்து உபகரணங்களும் (equipments) வாங்கப்படவேண்டும்.
தமிழில் தயாராகும் ஒவ்வொரு திரைப்படத்தின் நெகட்டீவ் பிரதியொன்றும் (duplicate negative copy), அதன் மின்பதிப்பொன்றும் (digital version of it) தமிழ்த் திரைப்படக் காப்பகத்தில் வைக்கப்பட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைக் கேட்டுக்கொள்ளலாம். அல்லது சட்டம் மூலம் கட்டாயப் படுத்தலாம்.
பழைய தமிழ் படங்களின் நெகட்டீவ்களையோ அல்லது பிரதிகளையோ தேடியெடுத்து அவற்றை புதுப்பிக்கும் நவீன முறைகளை கையாண்டு புதுப்பித்து வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் திரைப்பட காப்பகத்திற்கான ஆரம்ப செலவுகள் அனைத்தையும் தமிழ் திரைப்படத்துறையினர் (தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர்,இசையமைப்பாளர்கள் மற்றும் அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்கள்) பாதி, அரசு பாதி என்று ஏற்றுக்கொண்டு செயல்படலாம்.
நமது தமிழ் திரைப்படங்கள் நமக்குப் பின் வரும் சந்ததியினருக்குக் கிடைக்க வேண்டுமென்றால், தமிழ் திரைப்பட துறையை சார்ந்த நலமும், நமது அரசும் சேர்ந்து உடனடியாக தமிழ் திரைப்படக் காப்பகத்திற்கான வேலையில் இறங்கினால்தான் உண்டு.இல்லையெனில், நமது காலத்திலேயே நமது தமிழ்ப் படங்கள் அழிந்து போய்விடும். தமிழன் என்ற வகையில் ,தமிழ் சினிமாவை நெஞ்சார நேசிப்பவன் என்ற வகையில், தமிழ்த் திரைத் துறையினரே, தமிழக அரசே உங்கள் கால்களில் என் தலை வைத்து வணங்கி கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து நமக்கான தமிழ்த் திரைப்பட காப்பகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள்- உடனடியாக அந்தப் பணியில் இறங்குங்கள்!

-பாலுமகேந்திரா


Sunday 21 April 2013


முள்ளும் மலரும் படத்தில் நான்
பாலு மகேந்திரா
பூனே திரைப்பட கல்லூரியின் ஒளிப்பதிவு துறையில் என் மூன்று வருட படிப்பை 1969-ல் முடித்துக் கொள்கிறேன். எவரிடமும் உதவி ஒளிப்பதிவாளராக வேலை பார்க்காமலே 1971-ல் ஒளிப்பதிவாளராக பணியாற்றத் துவங்குகிறேன். பணியாற்றிய முதல் படம் நெல்லு”   இது மலையாளப்படம். இதன் இயக்குனர் ராமு கரியத். முதல் படத்திலேயே கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்குக் கிடைக்கிறது. 71 -முதல் 75 வரை ஐந்து வருடங்கள் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுகிறேன்.

பெரும்பாலனவை மலையாளப் படங்கள். இந்த ஐந்து வருடங்ளுக்குள்  மூன்று தடவைகள் கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எனக்கு தரப்படுகிறது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஆந்திர அரசின் விருதும் இரண்டு தடவைகள் என்னை வந்தடைகிறது. ஐந்து வருடங்களில் 21-படங்ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிவிட்டு 1976-ல் எனது இயக்கத்தில் வந்த முதல் படமான கோகிலா-வைத் தொடங்குகிறேன். கோகிலாவின் கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத் தொகுப்பு ஆகியவற்றை நானே செய்கிறேன். கோகிலா கன்னட மொழிப் படம். கமலஹாசன், ஷோபா மற்றும் ரோஜாரமணி ஆகியோர் இதில் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமாகிய மோகன் என்ற கன்னட இளைஞரை  இதில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அறிமுகப்படுத்துகிறேன். அப்பொழுது மோகன் பங்களூர் வங்கி ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இந்தப் படத்தின் இசை இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவரான சலீல் செளத்ரி. கோகிலா படத்தின் மூலம் சிறந்த திரைக்கதையாளருக்கான கர்னாடக அரசின் விருதும், சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதும் எனக்குக் கிடைக்கிறது. கோகிலா கன்னட மொழியிலேயே சென்னையில் 150-நாட்கள் ஓடிச் சாதனை படைக்கிறது. கோகிலாவை அடுத்து நான் ஒரு தமிழ்ப் படம் செய்ய விரும்பினேன். என் இயக்கத்தில் வரும் முதல் தமிழ்ப் படத்தில் எனது பால்யத்தை பதிவு பண்ணுவதென்று முடிவு பண்ணுகிறேன். என் நெஞ்சில் பசுமையாக  இருந்த ஞாபகங்கள் என்பதால் எனது முதல் தமிழ் படத்துக்கு அழியாத கோலங்கள் என்று பெயர் வைத்து  படத்திற்கான ஆரம்ப வேலைகளிலும் இறங்குகிறேன். இந்த சமயத்தில்தான் மகேந்திரன் என்ற இளைஞர் என்னை அணுகி அவர் இயக்க இருக்கும் அவரது முதல் படத்திற்க்கு நான் ஒளிப்பதிவு செய்யவேண்டும் என்று என்னைக் கேட்கிறார்.  இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று என்னைக் கேட்கிறார். இந்தப் படத்தை நான் ஒத்துகொள்ளவேண்டும் என்று எனது நண்பர் கமலும் விரும்பினார். கல்கியில் வெளிவந்த உமா சந்திரனின் முள்ளும் மலரும் என்ற நாவலைத் தான் மகேந்திரன் படமாக்க விரும்புவதாகவும் சொல்கிறார்.

அந்த நாவலை கல்கியில் வெளியானபோதே நான் படித்திருந்தேன். அண்ணன் தங்கை உறவை உணர்வு பூர்வமாகச் சொன்ன நல்ல நாவல். இந்தக் கதையில் வரும் அண்ணனாக நண்பர் ரஜினிகாந்தும், அவரது தங்கையாக எனது ஷோபாவும் நடிப்பதென்று முடிவாகிறது.

கோகிலாவைத் தொடர்ந்து நான் எடுக்க இருந்த எனது முதல் தமிழ் படத்திலும் ஷோபா இருக்கவேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அந்தப் படம் பதின்வயதுகளின் முற்பகுதியில் இருக்கும் மூன்று விடலைப் பையன்களைப் பற்றிய படம்.  அந்த மூன்று விடலைகளும்தான் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஷோபாவுக்கு அழியாத கோலங்கள் படத்தில் ஸ்கூல் டீச்சராக ஒரு சிறிய ரோல்தான் வைத்திருந்தேன். ஆனால் முள்ளும் மலரும் படத்தில் அவளுக்கு முக்கியமான ரோல். அதுவும் ரஜினிகாந்த் என்ற பெரிய நடிகருடன். எனது ஒளிப்பதிவில் ரஜினி தங்கையாக  அவள் தமிழில் அறிமுகமாவதே நல்லது என்றுபடுகிறது.
எனவே எனது அழியாத கோலங்கள் படத்தை தள்ளிப் போடுகிறேன். மகேந்திரன் இயக்கத்திலான முள்ளும் மலரும் படத்தில் முழுமையாக ஈடுபடுகிறேன். மகேந்திரனுக்கு இது முதல் படம். வசனகர்த்தாவான அவர் அதற்குமுன் உதவி இயக்குனராகப் பணியாற்றியோ அல்லது ஒரு திரைப்படப் பள்ளியில் பயின்றோ திரைப்பட இயக்கத்தைக் கற்றவரல்ல. எனவே அவரது முதல் படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற வகையில் எனது பொறுப்பு, (Responsibility)  மிக அதிகமானது. ஒரு பத்தின் ஒளிப்பதிவாளர் என்ற எல்லைக்குள் இருந்துகொண்டே முள்ளும் மலரும்  த்தின் திரைக்கதை அமைப்பிலும் உரையாடலிலும் திரைப்பட இயக்கத்திற்கு உட்பட்ட லென்சிங், ஷாட் டிவிஷன்ஸ், கெமராக்  கோங்கள் தேர்வுசெய்வது, நடிகர்களைக் கதாபத்திரங்களாக மாற்றுவது போன்ற அனைத்து பணிகளிலும் நான் என்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்கிறேன். படப்பிடிப்பின் பின் படத் தொகுப்பிலும் நான் கூடவே இருக்கிறேன்.
இந்தப் படத்தில் எனது பங்கேற்புகள் அனைத்துமே மகேந்திரனின் விருப்பத்தின்படி நடந்தவைதான். மகேன் ஒரு நல்ல எழுத்தாளர். ஒரு நல்ல ரசிகர். அவருக்கும் எனக்குமான உறவு அமோகமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இயங்கியதை நீங்கள் முள்ளும் மலரும் படத்தில் உணர்ந்திருப்பீர்கள்.

முள்ளும் மலரும் படம் 1978- ஆகஸ்ட்15-ம் திகதி வெளியாகிறது.  முதல் இரண்டு வாரங்கள் சுமார் என்ற நிலையில்தான் அதன் வசூல் இருந்தது. மூன்றாவது வாரத்தில் இருந்து வரலாறு காணாத வெற்றி. எனது முதல் தமிழ்ப் படமான அழியாத கோலங்கள் 79-ல் தான் வெளியானது. முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவுக்கும் சரத்பாபுவுக்குமான காதல் உண்ர்வுகளை மகேந்திரன் ஒரு பாடல் மூலம் காண்பிக்கலாம் என்று முடிவு பண்ணியிருந்தார். செந்தாழம் பூவில் என்ற
அந்தப் பாடலை இளையராஜா அற்புதமாக அமைத்துகொடுத்திருந்தார். பாடியது யேசுதாஸ். இன்று வரை இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் வரிசையில் அந்தப் பாடல் இடம்பெற்று வருகிறது...

இந்தப் பாடலை சரத்பாபு பாடுவதாக எடுப்பது என்றுதான் முடிவுபண்ணப் பட்டிருந்து. இரண்டொரு வரிகளை மட்டும் சரத்பாபு பாடுவதாக வைத்துவிட்டு மிகுதிப் பாடலை நான் எனது கோகிலா படத்தில் தொடங்கியிருந்த மொண்டாஜ் (Montage) உத்தியில் எடுத்தால் பொருத்தமாக இருக்கும் என்று எனக்கு பட்து. இதை மகேந்திரனிடம்  சொன்னேன் அவரும் ஒத்துக் கொண்டார். ஆனால் நடிகர் சரத்பாபுவுக்குதான் தன்னுடைய வாய் அசைவில் மொத்தப் பாடலும் இல்லையே என்பதில் வருத்தம் இருந்ததாக ஞாபகம்.
1976-ல் எனது முதல் படமான கோகிலாவில் நான் ஆரம்பித்த இந்த லவ் மொண்டாஜ் என்ற உத்தியை இன்றய இளம் இயக்குனர்கள் பலர் அழகாக உபயோகப் படுத்துகிறார்கள் என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்.கதையின் நகர்வு, கதாபாத்திரங்ளின் தோற்றம் அவர்களின்  உரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள், படத்தின் ஒளிப்பதிவு, அரங்க அமைப்பு போன்ற அத்தனை விஷயங்களிலும் யதார்த்தம், இயல்புதன்மை என்று பார்த்து பார்த்துச் செய்துவிட்டு பாடல் காட்சிகளில் இந்த யதார்த்தத்தை, இந்த இயல்புதன்மையை நாம் பண்டு முதல் கோட்டை விட்டே வந்திருக்கிறோம். தாலாட்டையும், ஒப்பாரியையும், மேடைப் பாடலையும்   இன்னும் இரண்டொரு பாடல் சந்தர்ப்பங்களையும் தவிர பெரும்பாலான பாடல் காட்சிகள் இயல்பு தன்மைக்கு புறம்பானவை. அபத்தமானவை என்பது நமக்குத் தெரியும்.

முள்ளும் மலரும்  படம் மகேந்திரனை மிக நுட்பமான இயக்குனர் என்று அடையாளம் காட்டியது. சினிமா இயக்கம் என்ற ராஜபாட்டையில் மகேந்திரன் எடுத்துவைத்த முதல் அடியின்போது அவருடன் நான் இருந்தேன் என்பதில் எனக்கு சந்தோஷம் உண்டு. எனது ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, தயாரிப்பாளர் வேணு செட்டியார், ஆர்ட் டைரக்டர் ராமசாமி ..என  முள்ளும் மலரும் படத்தில் பணியாற்றிய பலர் இன்று இல்லை. நாட்களை எண்ணியபடி நானும் மகேந்திரனும், இளையராஜாவும் இன்னும் சிலரும். ஆனால் ஒன்று.. எங்களுக்குப் பின்னும் தமிழ் சினிமாவில்  முள்ளும் மலரும் தொடரும். உன்னதமான படைப்புகளுக்கு அந்த சக்தி உண்டு. எனது படைப்புகள் மூலம் நானும், மகேந்திரனின் படைப்புகள் மூலம் மகேந்திரனும் இளையராஜாவின் இசை மூலம் இளையராஜாவும் எஙகள் மரணத்தின் பின்பும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டுதான் இருப்போம். மரணிக்கப் போவது எஙகள் உடல்கள். நாங்களல்ல!